Sunday 7 August 2011

இருபத்தைந்து பைசாவும் இரங்கராட்டினமும்.

,
                                                                       


ஊரில் மாரியம்மனுக்கு பூச்சாட்டி இருந்தார்கள் அடுத்த வாரம் ஊரே அமர்களப்படும் .திரும்பும் பக்கமெல்லாம்  டண்ணக்கு டண்ணக்கு டணக்கு நக்கு டண்ணக்கு என்று மேளச்சத்தம் கேட்க தொடங்கி இருந்தது . எங்கிருந்து வருவார்கள் என்று தெரியாது  பலூன்காரன் ,ஐஸ்வண்டிகாரன், பூக்காரிகள், தொடங்கி யார் யாரோ வந்து  ஊரெங்கும் கடைகளை போட்டுக்கொண்டு இருந்தார்கள் .

நான் எதிர்பார்த்துக்கொண்டு இருப்பவர்களை  இன்னும் காணும் , தம்பியோ   அண்ணா ரங்கராட்டினக்காரர்கள் இந்த வருசம் வரமாட்டங்கன்னு சுப்பிரமணி அவங்க அப்பா சொன்னாராம் அது உண்மையாண்ணா ? “ அப்படின்னு கேட்டான்  . அப்படின்னா இந்த வருசம் ரங்கராட்டினத்தில் ஆசை ஆசையாய் ஆட முடியாதுங்கிற நினைப்பு வந்ததும் எனக்கு உண்மையிலேயே பயமாயிருச்சு இருந்தாலும் தம்பி கிட்டடேய் அப்படியெல்லாம் இல்லடா சுப்பிரமணி  உங்கிட்ட பொய் சொல்லி இருக்கான் . போனவருசம் ரங்கராட்டினக்காரர்களுக்கிட்ட நான் கேட்டேன் அவங்க அடுத்த வருசமும் கண்டிப்பா உங்க ஊருக்கு வருவும்னு சொல்லியிருக்காங்க அதனால கண்டிப்பா வருவாங்கட அப்படின்னு சொன்னேன் .

பள்ளிக்கூடம் போனாலும் அங்கயும் திருவிழா பற்றித்தான் பேச்சாக இருக்கும் . முருகன் தனக்கு புது சொக்காயும் டவுசரும் எடுத்துயிருப்பதாக சொன்னான் . கமலம் டீச்சர் வந்து அறிவியலில் சவ்வூடுபரவல் பாடம் எடுத்துக்கிட்டு  இருந்தாங்க  எனக்கு  நினைப்பெல்லாம் ரங்கராட்டினம் மேல் இருந்தது . டீச்சர் திடீரென என்னை எழுப்பி சவ்வூடுபரவலுக்கு  இப்போ என்ன எடுத்துக்காட்டு சொன்னேன் சொல்லு பார்க்கலாம்னு சொல்லிட்டங்க. எனக்கோ ஒன்னும் புரியல ? இருந்தாலும்  ஜவ்வை எடுத்து வீடு பூராவும் பரப்பி வைக்கனும்னு சொன்னேன் . வகுப்பு பூராவும் ஒரே சிரிப்பாக இருந்தது கமலம் டீச்சர் கூட சிரிச்சுட்டாங்க அப்போதான் எனக்கே தப்பு புரிந்து ஒரே வெட்கமாய் வந்தது . வகுப்பு இடைவேளைக்கான மணி அடித்தது தம்பி பென்சில் கேட்க என்னோட வகுப்புக்கு வந்திருந்தான் புங்கமரத்தடியில் எங்க வகுப்பு பச்சியம்மாளை சுற்றி  நாலு பேர் நின்னுக்கிட்டு இருந்தாங்க இடது கையை நீட்டிக்கிட்டு அது மேல வலது கையால ஒரு பம்பரத்தை  சுற்றி காண்பித்தால் அது வேகமாக சுழல சுழல அதில் ஒட்டி இருந்த பொம்மைகளும் சுழன்றது . தம்பி சொன்னான் அண்ணா அது மாதிரி பம்பரம் நாமும் வாங்கலாமா அப்படின்னு கேட்டான் . பச்சியம்மாகிட்ட அந்த பம்பரம் எவ்வளவுனு  கேட்டேன் இரண்டு ருபாய்னு சொன்னா . நான் வீட்டில ஒரு எட்ணாவும் ஒரு நாலணாவும் சேர்த்து 75 காசு சேமித்து வைத்திருந்தேன் . தம்பிகிட்ட திருவிழாவிற்க்கு அத்தை வருவாங்கதான்டா அவங்க கிட்ட சொல்லி வாங்கிக்கலாம்ட என்று சொன்ன்னேன் .
                                      
அத்தை  எங்க வீட்டிற்க்கு வந்தாலே ஒரே சந்தோசம்தான் ரங்கராட்டினம் ஆட அத்தைதான் காசு தருவாங்க . ரங்கராட்டினத்தில் பத்து சுற்றுகள் சுற்ற 25 பைசா ஆகும் . ரங்கராட்டினத்தின் ஒரு பக்கம் நின்று கொண்டு ரங்கராட்டினகாரர்கள் இருவர் கீழே இழுத்துவிட ரங்கராட்டினம் மேலே போகும் .  கீழ் இருந்து மேலே போகும் போது ரொம்ப சந்தோசமா இருக்கும் ஆனா  மேல் இருந்து கீழே இறங்கும் போது அடிவயிறு பயங்கரம  இழுத்து பிடிக்கும் . தம்பி கத்தியே விடுவான் ஆனாலும் மேலும் மேலும் ஆட வேண்டும் என கிளர்ச்சி பிறக்கும்   கைக்குட்டையை கீழே வைத்துவிட்டு அடுத்தமுறை கீழே  இறங்கும் போது சரியாக எடுக்கும் போட்டியில் சாந்தி அக்காதான் ஜெயிப்பார்கள் . அப்படி விளையாடினா ஆபத்தாகும்னு ரங்கராட்டினக்காரர்கள் சொன்னாலும் யாரும் கேட்கமாட்டார்கள்.   

 நான் சின்ன குழந்தையா இருக்கிறப்போ ரொம்ப ஒல்லியா இருப்பேன் அத்தைதான் தூக்கி வைச்சுகிட்டு இருக்குமாம் . அத்தையோட கழுத்து செயினை  கடிச்சுகிட்டே இருப்பேன் .அத்தை எப்போதாவதுகூக்குமச்சன் குனிய வைச்சான்அப்படினா சொன்னா எனக்கு வெட்கமா வந்துரும் வேகமா அந்த  இடத்தை விட்டு ஒடிருவேன்.
பள்ளிக்கூடம் எப்ப விடுவாங்க ? எப்ப வீட்டுக்கு போகலாம்னு  நினைச்சுக்கிட்டு இருந்தேன் .வீட்டுக்கு போக மணி அடித்ததும் பையை தூக்கிக்கிட்டு வேக வேகமாக வீட்டுக்கு வந்ததும் மாரியாயி கோவிலுக்கு ஓடினேன் எல்லா கடைகளும் போட்டிருந்தார்கள் .ரங்கராட்டினகாரர்கள் யாரும் வரவில்லை . ஊரை சுற்றி சுற்றி வந்தேன் எங்கேயாவது ரங்கரட்டினக்காரர்கள் தென்படுகிறார்களா என்று  கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது ரங்கராட்டினக்காரர்களை எங்கேயும் காணவில்லை சோர்வாக வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தேன் வரும் வழியில் அத்தை ஊரிலிருந்து .வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தாங்க அத்தையை பார்த்த்தும் சோர்வெல்லாம் மறைஞ்சு போய் அத்தையை இருக்கி கட்டிபிடிச்சுக்கிட்டேன்.
அத்தை விதவிதமாய் தீணி வாங்கி வந்து இருந்தாங்க . அண்ணன் எனக்கும் தம்பிக்கும் கொஞ்சம் கொடுத்துவிட்டு மீதியை எங்கோ ஒளிச்சு வைச்சுட்டு விளையாட போயிட்டான் .அண்ணன் ஒளிச்சு வைச்ச தீணியை தம்பிதான் கண்டுபிடிச்சான் தம்பியும்  நானும் தீணியை ஆசை தீர திண்னுகிட்டு இருக்கறப்போ அண்ணன் வந்துட்டான் . அண்ணன் எங்களை அடிக்க டியாந்தான்  அண்ணனை பார்த்ததும் நானும் தம்பியும் சிட்டா பறந்துட்டோம் .  அண்ணான் இல்லாதப்ப மெதுவா வந்து அத்தைகிட்ட படுத்துக்கிட்டோம் . காலையில சூரியன்  உதயமாவதற்கு முன்பே  சுப்பிரமணி வந்து தம்பியை எழுப்பிக்கொண்டு இருந்தான் . “ டேய் டேய் எழுந்திருடா நம்ப ஊருக்கு ரங்கராட்டினக்கார்கள் வந்துட்டங்க அவங்க அங்கே பெரிய பெரிய குச்சியை ஊனிக்கிட்டு இருக்காங்கஎன்று சொன்னான் .  நானும் தம்பியும் , சுப்பிரமணியும் ரங்கராட்டினம் சுற்றும் இடத்திற்க்கு ஓடி வந்தோம் இளங்காலை நேர சூரியனின் மங்கலான வெளிச்சத்தில் கலர்கலரன தூண்களுக்கு இடையில் குழந்தைகளை எதிர்பார்த்து மெதுவாக காற்றில் அசைந்துகொண்டு இருந்தது  ரங்கராட்டினம்.




















0 comments to “இருபத்தைந்து பைசாவும் இரங்கராட்டினமும்.”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates