நமது பழந்தமிழரின் கணித திறனை உலகிற்கு பறைசாற்றும் கணக்கதிகாரத்தில் இருந்து மேலும் ஒரு புதிரை பதிவிடுகிறேன்
“ முப்பத்தி ரண்டு முழம்உளமுப் பனையைத்
தப்பாமல் ஒந்தி தவழ்ந்தேரிச்-செப்பமுடன்
சாணேறி நான்கு விரற்கிழியும் என்பரே
நாணா தொருநாள் நகர்ந்து “
ஒரு பனைமரம் 32 முழம் உயரமுடையது .பச்சோந்தி ஒன்று அதிலேற முயற்சி செய்தது.அது ஒரு நாளைக்கு சாண் ஏறி , நாலு விரல் கீழே இறங்குகிறது எனில் எத்தனை நாளில் பச்சோந்தி பனைமரத்தை ஏறி முடிக்கும் ?
விளக்கம்
முதலில் பனை மர உயரமான 32 முழத்தை விரற்கடையாக மாற்ற வேண்டும்
12 விரற்கிடை= 1 சாண் ,
2 சாண் = 1 முழம் ,
இதன் மூலம் 24 விரற்கடை = 1 முழம் எனவும் நாம் அறிகிறோம்
எனவே 32 முழம் ஆனது 32*24=768 விரற்கடை ஆகும் .
பச்சோந்தி நாள் ஒன்றுக்கு 12 விரற்கடை ( 1 சாண் ) ஏறி நாலு விரற்கடை கீழிறங்குகிறது .எனவே அது ஒரு நாளுக்கு (12 – 4=8) 8 விரற்கடை ஏறும்.
பச்சோந்தி மரம் ஏற ஆகும் நாட்கள்
768/8 =96
ஆகவே பச்சோந்தி 96 நாட்களில் மரத்தை ஏறி முடிக்கும்
டிஸ்கி – 1
கணக்கதிகாரம் என்பது 1862 இல் அச்சுப்பதிப்பாக வெளிவந்த நம் பழந்தமிழரின் கணித திறனை உலகிற்கு பறைசாற்றிய நூல் இதன் ஆசிரியர் காரி நாயனார் 1958 இல் சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம் மறுபதிப்பு செய்தது இந்நூலில் 64 வெண்பாக்கள் உள்ளது .நண்பர்கள் திரு .செந்தில் மற்றும் இ.பு.ஞானபிரகாசம் இந்த மூல நூலை பகிர்ந்து கொள்ள சொன்னார்கள் என்னிடம் முழுமையான நூல் இல்லை 10 வெண்பாக்கள் எனக்கு தெரியும் அதைதான் பதிவிட்டு வருகிறேன் மீதி முத்துமாலை புதிர் தெரியும் அடுத்த பதிவாக அதையும் பதிவிடுகிறேன் . முழு நூலையும் பெறுவதற்க்கு முயற்ச்சித்து வருகிறேன் நூல் கிடைத்த உடனே அதை மென்நூல் வடிவில் பதிவிடுகிறேன் . நண்பர்களின் கருத்துக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
Very Very super.
Thanks to the blog.
அருமையான பதிவு
https://tamilmoozi.blogspot.com/2020/05/blog-post_5.html?m=1