Monday 23 July 2012

மருத்துவ உலகையே புரட்டி போட்ட வைட்டமின் வரலாறு

,

இன்று உலகை எத்தனையோ நோய்கள் பயமுறுத்திக்கொண்டு உள்ளன ஆனால் ஸ்கர்வி ,பெரிபெரி போன்ற நோய்கள் உலகையே உலுக்கிய கதை உங்களுக்கு தெரியுமா ? இருபது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்து போன சோக வரலாறு உங்களுக்கு தெரியுமா ?  வாருங்கள் தோழர்களே வரலாற்றைப்புரட்டி பார்ப்போம்

கி.பி 1453 இல் கான்ஸ்டான்டிநோபிளை கைப்பற்றிய பிறகு இந்தியா போன்ற  ஆசிய நாடுகளுக்கு புதிய கடல் வழி கண்டுபிடிப்பது அவசியமாகிபோனது இதனால் ஐரோப்பாவில் இருந்து ஆயிரக்கனக்கான மாலுமிகளும் , வியாபாரிகளும் புதிய உலகை காண மாதக்கணக்கிலும் , ஆண்டுக்கணக்கிலும் பயணங்கள் மேற்க்கொண்டனர்  இவர்களை மரண பயத்திற்கு உள்ளாக்கும் ஒரு நோய் இருந்தது அதன் பெயர் ஸ்கர்வி
பற்களில் வடியும் இரத்தத்துடன், அதீத  களைப்புடன் வெளுத்தமுகத்துடனும் மரணத்தை எதிர்நோக்கி இருக்கும்  ஸ்கர்வி பாதித்தவர்களை பார்க்கும் மற்றவர்களுக்கு மரணபயம் உடனே தொற்றிக்கொள்ளும் . ஸ்கர்வியை தடுக்கும் வைட்டமின் பற்றி அப்போது அவர்களுக்கு தெரியாது ஸ்கர்விக்கு உரிய மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை .

புதிய வெளிச்சம்
HMS Salisbury எனும் கப்பலில் பயணம் செய்த ஜேம்ஸ்லிண்ட் மருத்துவர் ஸ்கர்வியை மருந்துகளால் குணப்படுத்த முடியாது உணவு முறைகளாலே குணப்படுத்தமுடியும் என தீவிரமாக நம்பினார் . தன்னுடைய நம்பிக்கையை தீவிரமான எதிர்ப்புகளுக்கு இடையே செயல்படுத்தி பார்க்க துணிந்தார் . ஸ்கர்வி பாதித்த பனிரெண்டு பேரை இரண்டு இரண்டு பேராக கொண்டு ஆறு குழுக்கள் அமைத்தார்  அனைத்து குழுக்களுக்கும் ஒரே வகையான உணவினை கொடுத்தார் ஆனால் ஒவ்வொரு குழுவிற்கும் இணை உணவினை மாற்றி மாற்றி கொடுத்தார் அதாவது ஒரு குழுவிற்கு பூண்டுகலந்து  கொடுத்தார் மற்றொரு குழுவிற்க்கு வினிகர் கலந்து கொடுத்தார் மற்றொருகுழுவிற்கு கடுகு கலந்து கொடுத்தார் இது போல மாற்றி மாற்றி கொடுத்தார் ஆனால் ஒரு குழுவிற்கு மட்டும் ஆரஞ்சு பழங்களும் ,சிறிது எழுமிச்சை சாறும் கொடுத்தார்  . கப்பலில் உள்ள மாலுமிகளுக்கோ இவரின் செய்கைகள் பைத்தியகாரத்தனமாக தோன்றியது . உலகையே  அச்சுறுத்தும் ஒரு கொலைகார நோய்க்கு மருந்து தராமல் உணவு வகைகளை மாற்றி கொடுத்தால் நோய் குணமாகி விடுமா ?  என்று எள்ளி நகையாடத்தொடங்கினர். ஆனால் உணவு பொருள்களில் உள்ள ஏதோ ஒன்று ஸ்கர்வியை நிச்சயம் குணப்படுத்தும் என்ற நம்பி ஜேம்ஸ்லிண்ட் மாதக்கணக்கில் செய்த உணவு சோதனையில் ஆரஞ்சுபழமும் ,எழுமிச்சை சாறையும் உணவில் சேர்த்துக்கொண்ட குழு மட்டும் ஸ்கர்வியிலிருந்து விடுபட தொடங்கியது முடிவில் ஸ்கர்வி முற்றிலுமாக விலகியது . மற்றவர்கள் ஜேம்ஸை அதிசயமனிதராக பார்க்க தொடங்கினர்.

 நிராகரிப்பும் வேதனையும்
 1947 ஆம் ஆண்டு  ஜேம்ஸ் லிண்ட் எழுதிய “ A Treatise of the scurvy “ எனும் கட்டுரை ம மருத்துவ உலகையே திரும்பி பார்க்க வைத்தது . நோய்க்கு மருந்து தராமல் உணவு முறைகள் மூலம் நோயை குணமாக்கலாம் எனும்  புதிய  சித்தாந்தம் உருவானது ஆனால் இதை சில மருத்துவர்களும் ,விஞ்ஞானிகளும் நிராகரித்தனர் . அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யப்படாததால் ஜேம்ஸ்ஸின் உணவு முறை நிராகரிக்கப்பட்டது 1928 இல் ஆல்பர்ட் செந்கயோர்கி எனும் விஞ்ஞானி சிட்ரஸ்  வகை பழங்களான ஆரஞ்சு,எலுமிச்சை ஆகியவற்றில் இருந்து  வைட்டமி C யை பிரித்தார் இதன் குறைபாட்டால்தான் ஸ்கர்வி வருகிறது என்று ஜேம்ஸ்லிண்டின் கண்டுபிடிப்புக்கு அறிவியல் விளக்கம் கொடுத்தார் பின்புதான் உலகம் ஜேம்ஸ்லிண்ட்ன் சாதனைகளை புரிந்து கொண்டது .
வைட்டமின் பெயர் காரணம்
ஸ்கர்விக்கு அடுத்தபடியாக உலகை உலுக்கிய இன்னொரு நோய் பெரிபெரி இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் கை கால்களை அசைக்ககூட முடியாமல் மரண அவஸ்தைப்பட்டனர் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய போலந்து நாட்டைச்சேர்ந்த  பன்ங் என்ற விஞ்ஞானி பாலீஷ் செய்யாத அரிசியில் இருக்கும் ஏதோ ஒரு பொருள் உடலுக்கு சக்தி அளித்து பெரிபெரி நோயை குணமாக்கும் எனக்கண்டறிந்தார் அதற்கு VITAL+AMINE =VITAMIN என பெயரிட்டார் அதாவது வைடல்என்றால் உடலுக்கு இன்றிமையாததாக தேவைப்படும் பொருள் அமைன் என்றால் நைட்ரஜன் கலந்த பொருள்
யாருக்கு நோபல் பரிசு ?
உலகின் பல பகுதிகளில் உள்ள மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் வைட்டமின்களை பற்றி ஆராய்ச்சியில் இறங்கி புதிய கண்டுபிடிப்பு முயற்சியில் இறங்கினர் . வைட்டமின் கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசுக்கு பன்ங்,கோல்டுபெர்கர்,எய்க்மென்,ஹாப்கின்ஸ்,கிறிஜின்,சுசூகி போன்றோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டான ஆனால்  எய்க்மென்,ஹாப்கின்ஸ் ஆகியோருக்கு 1929 ஆம் ஆண்டு வைட்டமின்கள் கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது .வைட்டமின்களின் வகைகளைப்பற்றியும் அதன் நன்மைகளைப்பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம் .

டிஸ்கி
நேசம் மிகுந்த நொஞ்சங்களே சில தனிப்பட காரணங்களால் வலையுலகில் இருந்து சில மாதமாய் பதிவுகள் இட முடியவில்லை கவலைகளை புறந்தள்ளிவிட்டு  நெருப்பிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையாய் எழுந்து மீண்டும் பதிவுலகிற்கு வந்துள்ளேன் உங்களின் ஆதரவு வேண்டுகிறேன்
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates